அகம்படியாரில் கோவன் தெற்றி பொன்பரப்பினான் திருஞானசம்பந்தன் கல்வெட்டு ———–…

Spread the love

First
அகம்படியாரில் கோவன் தெற்றி பொன்பரப்பினான் திருஞானசம்பந்தன் கல்வெட்டு
———————————————–
அகமுடையார் இனத்தை சேர்ந்தவர்கள் கோவில்களுக்கு நிறைய தானங்களை வழங்கியிருப்பதை கண்டோம்.அந்த வரிசையில் இன்று நாம் காண இருப்பது இன்றைய பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டபுரம் திருவாலீஸ்வரம் உடையார் கோவிலுக்கு செய்த இறைப்பணி பற்றியதாகும்.

மேற்சொன்ன கோவிலின் மகாமண்டப தென்சுவற்றில் பொறிக்கப்பட்ட மூன்றாம் இராசராசனின்(கி.பி 1219ம் ஆண்டு) காலத்து கல்வெட்டு கீழ்கண்ட செய்திகளை தருகின்றது.

ஆதாரம்: மத்திய அரசு கல்வெட்டு ஆண்டறிக்கை 1939-44

கல்வெட்டு செய்தி சுருக்கம்
அதாவது சோழர் சாமந்தமுதலி(படைத்தலைவனான) மீனவன் வாத்தராயன் என்பவன் கீழ் பணிபுரிந்த அகம்படியர் இனத்தை சேர்ந்த கோவன் தெற்றி பொன்பரப்பினான் திருஞானசம்பந்தன் என்பவன் திருவாலீஸ்வரம் உடையார் கோவிலின் பெரிய திருவாசல் முன்பு இறைவன் வீதிஉலா வர திருவிழா புற திருவீதி ஒன்றை அமைத்துள்ளார்.

மேலும் கோவில் மேற்குபகுதியில் இருந்த கோவிலுக்கு சொந்தமான இடத்தை கோவில் நிர்வாகத்தினரிடம் விலைக்கு வாங்கி அங்கு நந்தவனம் ஒன்றை அமைத்து அதற்கு வண்ணாட்டார் என்று பெயரிட்டுள்ளார் மேலும் நந்தவனத்தில் பூக்கம் பூக்களை தொடுக்க திருப்பூ பலகை ஒன்றை அமைத்து தந்துள்ளார்.

விரிவான செய்திகள்
கல்வெட்டு செய்தியில் குறிப்பிட்ட அகம்படியர் திருவிழா புற திருவீதி அமைத்துள்ளான் என்ற செய்தியை பார்த்திருப்பீர்கள்!
இச்செய்தியின் மூலம் கோவில் அமைந்த காலத்தில் கோவிலுக்கு அருகில் மக்கள் குடியிருப்புகள் பெரிதாக இல்லை என்று தெரிகிறது. அப்படி இல்லாததனால் தான் இறைவன் எழுந்தருள திருவீதி ஒன்றை அமைத்தான் என்று தெரிகிறது.

பொதுவாக மக்கள் குடியிருக்கும் ஊர்களில் கோவில்கள் தோன்றுவது இக்கால நடைமுறை என்றால் முன்பெல்லாம் முதலில் குறிப்பிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லது அடையாளப்படுத்தப்பட்ட பகுதியில் கோவிலை நிறுவி அதன் பின்னரே குடிகளும் ,குடிகள் சார்ந்த தெருக்களும் அமைந்ததை பல்வேறு கல்வெட்டு செய்திகள் மூலம் அறிய முடிகின்றது. கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று பழமொழி அமைந்தது இக்காரணத்தினால் கூட இருக்கலாம்.

இக்கல்வெட்டு செய்தியின் மூலம் இக்கருத்து உறுதிப்படுகின்றது. அதாவது கோவிலின் பெரிய திருவாசல் முன்பு இருந்த இடத்தை
செடி கொடிகள் காட்டின்னை வெட்டி ,
மேடு பள்ளமாக இருந்த இடத்தை சீர் திருத்தி தெரு அமைத்து அதில் இறைவனை வீதிஉலா வர ஏற்பாடு செய்துள்ளான். ஆகவே இதன் பின்னர் கோவில் சுற்றி குடிகள் வந்து குடியேறி இருக்க வேண்டும் என்பது மறைமுகமாக நாம் புரிந்து கொள்ளக்கூடியதாகும்.

அடுத்து இவன் பெயரை கவனிப்போமானால் கோவன் தெற்றி பொன்பரப்பினான் திருஞானசம்பந்தன் என்பதில் கோவன் என்பது கோ எனும் பசுக்களை வளர்க்கும் இடையர்களையோ அல்லது அந்த கோகூட்டங்களை( ஆநிரைகளை ) பாதுகாப்பவர்களுக்கு இக்கல்வெட்டின் முந்தைய காலத்தில் வழங்கிய பெயராகும்.

அடுத்து தெற்றி என்பது பழந்தமிழ் காலத்தில் பயன்படுத்தப்பட்ட பெயராகும் .என்றாலும் இன்று இதன் உண்மை பொருளை அறிந்து கொள்வது கடினமாகவே உள்ளது எனலாம்.

அடுத்து வரும் பொன்பரப்பினான் என்ற அடைமொழி கோவில் கோபுரங்களை பொன்னால் வேய்ந்தவர்களை குறிக்கும் பெயராகும் . ஒருவேளை இவன் கோவிலை பொன்னால் வேய்ந்தவன் என்றால் அதற்கான கல்வெட்டு தரவுகள் கிடைக்கும் போது இதை உறுதியாக சொல்லமுடியும் .

அல்லது இவன் இன்றைய சேலம் மாவட்டம் அறகளூரை ஆண்ட வாணாதிராய மன்னனான பொன்பரப்பினான் மகதேசன் என்பவன் பெயரால் அமைந்த எனும் பொன்பரப்பினான் எனும் ஊரை சேர்ந்தவனாக இருக்கலாம் ஆனால் பொன்பரப்பினான் மகதேசன் என்பவன் இக்கல்வெட்டு காலத்திற்கு பின் வாழ்ந்தவன் என்பதால் இவ்வூரை கொண்டு இப்பெயர் அமைந்திருக்க வாயிப்பில்லை.

இருப்பினும் குறிப்பிட்ட கோவன் தெற்றி பொன்பரப்பினான் திருஞானசம்பந்தன் பற்றி வேறு ஏதனும் கல்வெட்டுக்கள் கிடைத்தால் இது குறித்து மேலும் அதிக தகவல்கள் தெரியவரும்.

இறுதியாக வரும் திருஞானசம்பந்தன் என்பது தேவார மூவரில் ஒருவரான திருஞானசம்பந்த பெருமாளை குறிக்கும் பெயராகும் எனலாம்.

அகம்படியர் குறித்த தவறான புரிதலும் சிறுவிளக்கமும்
——————————————————
அகம்படி,அகம்படியர்,அகம்படி முதலி என்றவுடன் அவர்கள் அரண்மனையை சேர்ந்த அதிகாரிகள் என்றும் அரண்மனை அலுவலர் என்றுமே பெரும் வரலாற்று அறிஞர்கள் ,கல்வெட்டு ஆய்வாளர்கள் பலரும் கருத்தை கொண்டுள்ளனர்.

ஆனால் அது அவர்கள் தவறென்று அகம்படி என்பதன் தமிழ் விளக்கத்தை பேரகராதியில் தேடிய அவர்கள் பேரகராதி தொகுதி எழுதப்பட்ட காலத்தில் வழக்கத்தில் இருந்த பொருளையோ அல்லது தொகுத்தவர் புரிந்தகொண்ட அடிப்படையில் எழுதிவிட்டார். அதை படித்த பின்னவர்களும் அதையே அப்பெயருக்கென விளக்கமெனக்கொண்டு தங்கள் வேலை எளிதாக முடிந்துவிட்ட சந்தோதத்தில் அதையே பொருளாக கொண்டு கல்வெட்டு ஆண்டறிக்கை.கல்வெட்டு தொகுப்புகள், வரலாற்று நூல்கள் என எழுதியும் வைத்து சென்றுவிட்டனர்.

ஆனாலும் இலங்கையை சேர்ந்த திரு. பத்மநாபன், தமிழ்நாட்டு சேர்ந்த திரு. ஐராவதம் மகாதேவன் , திரு. எஸ்.ராமச்சந்திரன் போன்ற புகழ்பெற்ற வரலாற்றிஞர்கள் அகம்படியர் என்பவர் தனித்த சாதியினர் வரலாற்றில் தொடர்ச்சியாக இயங்குவந்த போர்குடி சமூகத்தினர் என்பதை முதன்மை வரலாற்று தரவுகளான கல்வெட்டுச்சான்றுகளை காட்டி குறித்துள்ளனர்.

கல்வெட்டில் காணப்படும் பறை முதலி (பரையர் சாதியில் முதன்மையானவன்) ,வேளான் முதலி (வேளான் சாதி முதன்மையானவன்) , பண்ணாட்டு முதலி (பள்ளி சாதியில் முதன்மையானவன்) என்பது அந்ததெந்த சாதிகளை குறிக்கும் பெயராகும் போது அகம்படி முதலி என்பது மட்டும் அரண்மனை அதிகாரிகளை குறிக்கும் எனச்சொல்வது விசித்திரமான விளக்கமாகும்.(பார்க்க: செங்கம் கல்வெட்டு வரலாறு இதழ் 13)

பல்வேறு கல்வெட்டு செய்திகளில் அகம்படியர்கள் தண்டநாயகம் ,சாமந்தர்,தன்ந்திரி எனும் தளபதிகளாகவும், அரசப்பிரதிநிதி,குறுநில அரசர் என்றும் , கரிகாலன் காலத்தில் ஆந்திராவில் குடியேறிய பொத்தப்பி சோழர் வழியினர் என்றும் , பாண்டிய அரசர்களிடம் பெண் எடுத்து உறவினர்கள் ஆனவர்கள் என பல்வேறு ஆளுமைகளில் காட்டப்படும் போது அரண்மனை அதிகாரி என்று எழுதி முடித்துவிடுதல் வரலாற்றை ஆய்ந்து எழுதவேண்டிய ஆய்வாளர்கள் தங்கள் சிந்தனையை தாங்களே மட்டுப்படுத்தும் செயலாகும்.

இந்த கல்வெட்டு செய்தியை உதாரணமாக எடுத்துக்கொண்டால் கூட
குறிபிட்ட இந்த அகம்படியர், மீனவன் வாத்தராயன் எனும் தளபதியின் கீழ் பணியாற்றிய அதிகாரியாக குறிப்பிடப்படுகிறான்.

அரசர் வாழுமிடமே அரண்மனையாகும்
தளபதிகள் வாழுமிடம் அரண்மனையாகாது . அப்படியென்றால் தளபதிக்காக அகம்படி (அரண்மனை அதிகாரியாக) பணிபுரியும் அதிகாரி என்று பொருள் கொள்ளுதல் தவறானதாகும் அல்லவா?
ஆகவே அகம்படி முதலி என்பது வேளான் முதலி,பண்ணாட்டு முதலி என்பது போல சாதியை குறிக்கும் பெயராகும் . அதாவது மரபு ரீதியாக வழிவழியாக குறிப்பிட்ட இனக்குழுவினரே முதலில் அகம்படி மரபாக ஆரம்பித்து பின்பு இனக்குழுவினரின் தொழிலாக மாறியதே அகம்படியர் என்பதாகும் இதனை விரைவில் வரவுள்ள அகமுடையார் வரலாற்று நூலில் பல்வேறு ஆதாரங்களுடன் மிகவும் விரிவாக பேச உள்ளோம்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருவாலீஸ்வரம் கோவிலிலும் அகமுடையார் கல்வெட்டு கிடைத்துள்ளது. அதை விரைவில் காண்போம்.

நன்றி
இக்கல்வெட்டினை கண்டறிந்து ஆய்ந்து கட்டுரை எழுத நம் பார்வைக்கு அனுப்பிய அகமுடையார் அரண் நிறுவனர் திரு.பாலமுருகன் அகமுடையார் அவர்களுக்கு நம் நெஞ்சார்ந்த நன்றிகள் பல!

ஏற்கனவே சொன்னது போல் கல்வெட்டுக்களில் குறிப்பிடப்படும் அகம்படியர் பற்றி தவறான பொருள் கொண்டமைக்கு ஒருவகையில் அகமுடையார் சமூகத்தினர் பெரும் காரணமாகும். அகமுடையார் இனத்தவர்கள் வரலாற்று மீட்பின் மீது உள்ள அக்கறையின்மை காரணமாகவே இது தொடர்ந்து நிகழ்கிறது என உறுதியாக சொல்லலாம்.

ஏனென்றால் அகம்படி,அகம்படியர் என்பதற்கு தவறாக பொருள் கொள்வோரிடம் சான்றுகளை எடுத்துக்காட்டி உண்மையான பொருளை விளக்கியிருந்தால் அவர்களும் புரிந்துகொண்டு மாற்றி இருப்பார்கள் ஆனால் இதுவரை இதற்கும் எந்த முயற்சி செய்யாததே இந்த அவல நிலைக்கு முக்கிய காரணமாகும்.

இனிமேலேனும் அகமுடையார் வரலாற்று முயற்சி செய்வோர் ஓரிருவரே அவர்களை கண்டறிந்து அவர்கள் வழியாக அகமுடையார் வரலாற்று நூல்கள் எல்லோர் பார்வைக்கும் கொண்டு அகமுடையார் பேரினத்தின் பெருமையை உலகறிய செய்ய வேண்டும்!

வணக்கங்களுடன்
மு.சக்திகணேஷ் சேர்வை(அகமுடையார்)
அகமுடையார் ஒற்றுமை பக்கத்திற்காக




இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo